திருவண்ணாமலையில் நடைபெற்ற உண்டாட்டு நிகழ்வு இலக்கியத் திருவிழா போல நடைபெற்றது.
பெங்களூர், கோவை, மதுரை, சேலம். தஞ்சை, சென்னை, கொச்சி, புதுச்சேரி எனப் பல்வேறு ஊர்களில் இருந்து இலக்கியவாசகர்களும், எழுத்தாளர்களும் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்திருந்தார்கள். பவாவின் ஏற்பாடு எப்போதும் ஆகச்சிறந்ததாகவே இருக்கும். இந்த முறை கொண்டாட்டத்தின் உச்சம். பவாவும், அவரது குடும்பமும் நண்பர்களும் இந்நிகழ்வை மறக்கமுடியாத பெரும் அனுபவமாக உருவாக்கினார்கள்.
காலை பத்து மணிக்குத் துவங்கி இரவு ஒன்பது வரை நிகழ்வுகள். வாசகர்கள் பலரும் எனது படைப்புகள் குறித்து பேசியது மன நிறைவைத் தந்தது.
நிகழ்வில் நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர் சா. கந்தசாமி, மலையாள எழுத்தாளர் அசோகன் செருவில் இருவரும் வந்து சிறப்பித்தது நன்றிக்குரியது.
என் நண்பர்கள் கோணங்கி, ஷாஜி, முத்துகிருஷ்ணன், சோபியா, ஜி.குப்புசாமி, சந்துரு, சாமிநாதன், வேலூர் லிங்கன், முருகபூபதி, திருப்பூர் முரளி, கொச்சி ஹேமலதா, வசந்தா அக்கா, கடலூர் சீனு, எழுத்தாளர் நரன், சாத்தூர் தியாகு, அகரமுதல்வன், இளவேனில், ஒவியர் கருப்பசாமி, நவீனா, வேடியப்பன், சாம்டேனியல், மணிகண்டன் முத்துமாணிக்கம், ஜி.கே.ராமமூர்த்தி பாடகர் சுந்தரஐயர், தோழர் சந்துரு, எஸ்.கே.பி. கருணா, பிரேம், ஸ்ரீ, கலைஇயக்குனர் ராகவ், ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை வாழ்த்தியது மிகுந்த நன்றிக்குரியது. என் படைப்புகளை தொடர்ந்து வாசித்து வரும் எண்பது வயதைக் கடந்த கோமதியம்மாள் பெங்களுரில் இருந்து தனது குடும்பத்துடன் வந்து வாழ்த்தியது நான் பெற்ற பேறு.
புகைப்படக்கலைஞர்கள் இளவேனில், ராஜசேகர் எடுத்த புகைப்படங்கள் அரங்கினை அலங்கரித்தன. இளவேனில் எடுத்த புகைப்படம் ஒன்றைப் பரிசாக அளித்தார். ஒவியர் கருப்பசாமி மற்றும் நண்பர்கள் வரைந்த ஒவியங்களும் பரிசாகத் தரப்பட்டன.
பள்ளி மாணவர்களை அழைத்து வந்து என்னுடன் உரையாடச் செய்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நன்றிகள்.




நாதஸ்வர இசையோடு என்னை வரவேற்று மாலை மரியாதைகள் செய்து பாராட்டினார்கள்.

மாலை அமர்வில் கலந்து கொண்டு எனது படைப்புகள் குறித்து சிறப்பான உரையை நிகழ்த்தினார் பாரதி கிருஷ்ணகுமார்.
கல்யாண வீடு போல காலை முதலே விதவிதமான உணவுவகைகளை கொடுத்தபடியே இருந்தார்கள்.
மிகவும் அருமையான மதிய உணவை பவா ஏற்பாடு செய்திருந்தார். பத்தாயம் என்ற இயற்கை சூழ்ந்த இடத்திற்குள் நாள் முழுவதும் நண்பர்களுடன், இலக்கியம் பேசியபடி ஒன்றாக கழித்தது மனநிறைவைத் தந்தது
இத்தனை பெரிய கொண்டாட்டம் பாராட்டினைச் செய்த பவாவின் நிகரற்ற நேசத்திற்கு என்ன கைமாறு செய்துவிட முடியும். நன்றி நண்பனே
ஷைலஜா, ஜெயஸ்ரீ, வம்சி, மானசி, சஹானா, உத்ரா உள்ளிட்ட அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றிகள்.
நிகழ்வை ஆவணப்படுத்தி இணையத்தில் பகிர்ந்த அன்பு கபிலனுக்கும், சுரேஷ் மற்றும் ஸ்ருதி டிவிக்கு நன்றி.
வாசகர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.
****
Shaji Chen speech about S.Ramakrishnan
Naveena speech at S.Ra’s undatu function