அயர்லாந்தில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தின் பேரதிர்ச்சி இன்றும் அவர்கள் ஆழ்மனதில் படிந்திருக்கிறது. அந்த நினைவுகளின் வெளிப்பாடு போலவே The Wonder திரைப்படம் உருவாகியுள்ளது, செபாஸ்டியன் லீலியோ இயக்கியுள்ள இந்தப் படம் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் சிறுகதையைப் படிப்பது போல விந்தையும் நிஜமும் ஒன்று கலந்திருக்கிறது.

கதையின் மகத்தான விந்தையாக முன்வைக்கப்படுவது பசியே. அன்னா என்ற சிறுமி நான்குமாதங்களாக எதையும் சாப்பிடுவதில்லை. அவளிடமிருந்து பசி மறைந்துவிடுகிறது. அவள் உணவு உட்கொள்ளாமலே உயிர்வாழுகிறாள். இந்த விந்தையை ஊர் மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் ரகசியமாகச் சாப்பிடுகிறாள் என்று நினைக்கிறார்கள். அல்லது இது தெய்வச்செயல். அவள் கடவுளின் அருளால் இப்படி உணவில்லாமலே உயிர்வாழுகிறாள் என்று கருதுகிறார்கள்.
எது உண்மை என்று கிராம அதிகாரிகளுக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த விந்தையை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதன் உண்மையை அறிந்து கொள்வதற்காக அவர்கள் ஒரு நர்ஸை அன்னாவினை கண்காணிக்கும்படி நியமிக்கிறார்கள்
கதை 1862 ஆம் ஆண்டில் நடக்கிறது. அயர்லாந்தில் பெரும் பஞ்சம் (Great ஏற்பட்டது 1845-1852 கால கட்டத்தில். அப்போது பெரும் திரளான மக்கள் பட்டினியாலும் நோயாலும் மடிந்தார்கள். இந்தப் பஞ்சத்தின் பின்விளைவு போலவே இக்கதை விவரிக்கப்படுகிறது
பஞ்சத்தின் போது பசியற்று மனிதன் வாழ முடியாதா என்று மக்கள் ஏங்கினார்கள். பஞ்சம் நீங்கிய போதும் அதன் சுவடுகள் மறையவில்லை. அன்னா அதன் அடையாளம் போலவே இருக்கிறாள். எலிசபெத் “லிப்” ரைட் எனும் அந்த நர்ஸ் சிறிய அயர்லாந்து கிராமத்திற்குத் தனது சொந்த துயரிலிருந்து விடுபடுவதற்காகவே வருகிறாள். அவளது மருத்துவப் பரிசோதனைகள் அன்னா விஷயத்தில் தோல்வியடைகின்றன

அன்னாவிடம் ஏதோ ஒரு ரகசியமிருக்கிறது என்பதை லிப் உணர்ந்து கொள்கிறாள். ஆனால் அதைக் கண்டறிவது எளிதாகயில்லை
அவள் அறிந்து கொள்ளும் உண்மையின் போது நாம் அன்னாவை ஒரு பறவையைப் போல உணருகிறோம்.
இந்த உண்மை ஒரு துவக்க புள்ளி மட்டுமே. அதன்பின்பு மறைந்துள்ள கசப்பான நிகழ்வுகளும் அதன் விளைவுகளும் அதிர்ச்சி தருவதாக உள்ளன
லிப் கண்டறிந்த உண்மைகளை உள்ளூர் சபையிடம் முன்வைக்கிறாள். அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அன்னாவை விடவும் விசித்திரம் அவளது அம்மா ரோசலீன் , மௌனமாக நடந்து கொள்ளும் அவள் ரகசியங்களை ஒளிக்கிறாள். அவளே அன்னாவை உருவாக்குகிறாள்.
லிப்பிற்கும் டெய்லிகிராப் பத்திரிக்கையின் செய்தியாளருக்கான உறவு. அன்னாவிற்கும் லிப்பிற்குமான உறவு இரண்டும் அழகான இரண்டு இழைகளாகப் பின்னிச் செல்கின்றன

அன்னா தொடர்ந்து பிரார்த்தனை செய்கிறாள். அவள் ஒரு தெய்வப்பிறவி என்பது போலவே நடந்து கொள்கிறாள். அவள் நினைவில் பதிந்துள்ள கசப்பான நிகழ்வுகளை எளிதாகக் கடந்து போக முடியவில்லை என்பதே நிஜம்.
பஞ்சத்திலிருந்து கதை குற்ற மீட்பினை நோக்கி நகர ஆரம்பிப்பது எதிர்பாராதது. அன்னாவை சுற்றிப் பின்னப்படும் கதைகள் அவிழும் போது அன்னா உருமாற ஆரம்பிக்கிறாள். நரகத்திலிருந்து சொர்க்கத்தை நோக்கி செல்லும் அவளது முயற்சி அதிர்ச்சியானது. Ari Wegner ன் ஒளிப்பதிவு அபாரம்.
பெண்களைச் சுற்றியே நகரும் கதை ஆண்களின் இருண்ட மனதைப் பேசுகிறது என்பது தான் படத்தின் சிறப்பு.
.